முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 2

இந்த முப்புகுருவைப் பற்றி பெரும் ஞானிகள் கண்டு பிடித்து தாங்கள் அனுபவித்து விட்டு பின் அதை பரி பாஷைகளால் மறைத்தனர் .ஏனென்றால் இது தகுதியில்லாத நபர்களிடம் கிடைத்தால் அவர்கள் இந்த உலகத்தையே ஆட்டி வைத்துவிடும் வல்லமை அளிக்கக் கூடியது . மெய்யன்பர்கள் இதை அனுபவித்து எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்யவே இதை இறைவன் படைத்துள்ளான் .இதைப் பற்றி தெரியாத பலர் முப்பு எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேள்விகள்  அனுப்பும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .

எனக்குத் தெரிந்து சித்ரா பௌர்ணமியன்று  பல்லாயிரம் பேர்களாவது முப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று  அருப்புக் கோட்டை அருகிலுள்ள கோவானூர் என்ற இடத்தில் உள்ள குண்டு மேனியம்மன் சன்னதியையைச் சுற்றி தோண்டி தோண்டி குழிகளாக்கிவிட்டார்கள்.அதில் பூநீர் எடுக்கும் விதத்தை விஸ்தாரமாக வேறு சொல்வார்கள்.

இதில் காய்ச்சினால் உப்பெல்லாம் போச்சப்பா ,காய்ச்சடா ரவி முகத்தில் காய்ச்சு காய்ச்சே !!!! என்று சுப்பிரமணியர் ஞானத்தில் சொன்னதை வைத்து இந்தௌவர் உப்பை பனி நீரிலும் , மழை நீரிலும் கரைத்து வடி கட்டி சூரிய வெளிச்சத்தில் காய்ச்சி எடுப்பர்.

இந்த முப்புவை அண்டம் என்றழைப்பார்கள் ஆனால் இது முட்டையல்ல , முட்டை ஓடுமல்ல, மானிடர்கள் மண்டையோடுமல்ல ,  உவர் நீரல்ல , ரோமமல்ல , கண்ணீரல்ல ஈசனுடைய விந்து என்பார்கள் அதனால் இது சூதம் என்ற பாதரசம் என்று நினைப்பார்கள் ,அதுவுமல்ல , தளிராக இருக்கும் எந்த மூலிகையுமல்ல , சமாதி நிலையில் ஊணும் உப்புமல்ல (சமாதிகளில் கல்லுப்பைக் கொட்டி நிரப்புவார்கள் ),  சுக்கிலமான விந்தின் கூறுமல்ல , கொடிய சுண்ணாம்புக் கூட்டமுமல்ல.

கீழ்க்கண்டவையெல்லாம் முப்பு அல்லவென்று  தள்ளிவிடு , உவரல்ல (களர் நிலங்களில் விளையும் உவர் மண்ணல்ல ), துருசுமல்ல ( மயில்துத்தமென்பர் ) , சவுக்கார மண்ணுமல்ல அதன் சத்துமல்ல , ஆணுமல்ல ,பெண்ணுமல்ல , வெடியுப்பு , கறியுப்பு , விஷ நீரல்ல , ரத்தினமும் இல்லை , மலையுமில்லை , கோசமல்ல ( உடல் என்று பொருள் படும் ) , எலும்பை எரித்த அஸ்தியல்ல , குருவண்டல்ல ( குரு வண்டு என்பது அதன் மேல் பகுதியில் ஆறு புள்ளிகளுடன் இருக்கும்  ) , அது வஸ்துவும் இல்லை, சிறு நீருமில்லை, எனில் அது பஞ்ச பூதங்களில் ஒன்றே .

பிண்டம் என்ன என்று சொல்லப் புகுந்தால் பாரமில்லை , சாரமில்லை , இவற்றால் பயனுமில்லை . பேர் பல சொன்னாலும் பெண்ணில்லை , அப் பெண்பிள்ளை பெற்ற பிள்ளையில்லை , கருவுமில்லை , சிசுவும் இல்லை , மங்கையர்கள் தூரமான கழிவு இரத்தமான மாதாந்திர இரத்தமுமில்லை , கும்பிடும் கல்லுமல்ல  ,பூமியுமல்ல , உயிருடன் இருக்கும் ஜீவ ஜந்துக்கள் ஒன்றுமில்லை, மதுவில்லை , மலமில்லை , இன்னும் இது பற்றி சொல்லுகிறேன் என்கிறார் .

நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

பதிவு மிகப் பெரியதாகப் போவதால் முத்திரவியம் மூன்றாம்  பாகமாகவும் வெளிவருகின்றது .