சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(3)

சுமார் 17 வருடங்களுக்கு முன்னால் நான் வருணிக்கும் இச்சம்பவம் நடந்தது.நான் சென்ற மடலில் குறிப்பிட்டிருந்த ராஜபாளையம் அருகில் உள்ள முறம்பு என்ற ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில், சிலர் ஒரு கூட்டமாக அங்கே உள்ள கிறித்துவ ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

நான் ஒலிப்பானை ஒலித்ததும் அந்தக் கூட்டத்தினர் இரண்டாகப் பிரிந்தனர்.நானும் வண்டியின் வேகத்தைக் குறைத்து, அவர்கள் முழுவதும் விலகிய பின்னர் மீண்டும் வேகத்தை அதிகரித்த போது ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தை வண்டியின் குறுக்கே ஓடிவந்துவிட்டது.மீண்டும் வண்டியின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தும் முன்  அக்குழந்தைக்கு அடிபட்டுவிட்டது.

அந்தக் குழந்தையோ மயக்கமாகிவிட்டது.எனக்கு பதற்றமாகிவிட்டது. அங்கே உள்ள இலவச மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம்.ஆனால் அவர்கள் குழந்தைக்கு அடி பலமாகப் பட்டு இருக்கிறது.நாங்கள் வைத்தியம் பார்த்து குழந்தைக்கு ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்டவுடன் குழந்தையின் சொந்தக்காரர்கள், வருத்தமும் அதன்பின் கோபமும் கொண்டார்கள்.

காவல்,காராக்கிரகம் எல்லாம் என்முன் வந்து என்னை கவலை கொள்ள வைத்தது.இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில், எனக்கு நான் கற்ற கலைகளுள் ஒன்றான வர்ம மருத்துவம் என்ற ஒரு அற்புதக்கலை கலை மகள் அருளால் என் கவனத்திற்கு வந்தது.

தொடு வர்மம் 96 ல் உச்சி வர்மத்தில் (கொண்டைக் கொல்லி வர்மம் என்றும் சொல்வார்கள்), தாக்குதல் உற்றிருந்தால் என்ன குறி குணங்கள் ஏற்படுமோ அந்தக் குறி குணங்கள் இருப்பது கண்டேன்.எனவே அதற்கான இளக்கு முறைகளைக் கையாண்டு அந்தக் குழந்தையின் வர்மத்தை இளக்கி மயக்கம் நீக்கினேன்.
அந்த முறைகள் எல்லா வர்ம இளக்கு முறைக்கும் பயன்படும் என்பதால் இங்கே விளக்குகிறேன்.தயவு செய்து இதை எல்லோரும் நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இது சிறு குழந்தகள் பிறந்தவுடன் உச்சிக்குழி மூடாமல் இருக்கும் இடமே இந்த வர்மம் நிலை கொண்டிருக்கும் இடம்.அதாவது உயிர் உடலின் உள்ளே நுழைந்த வழி இதுவே.எனவேதான் அந்த வழி மூடாமல் இருந்து பின் எலும்பு மூடிவிடும்.உயிர் வர்மத்தால் சாக இருக்கும் போது உயிர் நுழைந்த வழியான இந்த இடத்தை சரி செய்யும் வழியின்மூலம் உயிரை உடலின் இருப்பில் இருக்க உணர்த்தலாம்.அதன் மூலம் உயிரை உடலில் தங்க வைக்கலாம். இந்த முறைகளுக்கு வர்ம அடங்கல் முறை என்று பெயர்.
 உச்சி வர்மம்(கொண்டைக் கொல்லி வர்மம்) 
பாடுவோம் உச்சி நடுவுள்ளம் தன்னில்
பாங்கான அடியிடிகள் தாக்குப்பட்டால்
தேடுவோம் தலை குழைந்து கை கால் சோர்ந்து
தேகமது அசந்துவிடும் மூவைந்துக்குள்
நாடுவோ மிளக்கு முறைதன்னைக் கொண்டு
நல்ல கைப்பாக மதாய்க்குருவும் வைத்து
கூடுவோம் கெந்தி ராசி நாசிக் கேற்றி
கொடுத்திடு பின் கஷாயம் நெய் முறையாய்த்தானே
(தொடுவர்மத் திரட்டு! பாடல் 14)
 உச்சந்தலையின் உச்சியில்,அடி,இடி,தாக்குதல் விழும்போது தலை குழைந்து விழும்கை,கால்கள் சோர்ந்து போகும். இந்த தாக்குதல் உற்றவர்களை மூவைந்து (3×5=15)நாழிகைக்குள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் எனில் 15×24= 360 நிமிடம்( 6 மணி நேரம்) வர்மத்தை இளக்க வேண்டும் இல்லாவிட்டால் உயிர் உடலில் தங்காது.
அது என்ன 6  மணி நேரம் , அது இரு ஜாமங்கள் , என்பதைக் குறிக்கும், பழந்தமிழரின் நேர கால அளவுகள் துல்லியமானவை. அவை உயிரோட்டத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டவை. வர்ம காலங்கள் மட்டுமல்ல உயிர் பற்றியும் ,வியாதிகள் பற்றியும்ஆறு சிறு பொழுதுகள் ஆறு பெரும் பொழுதுகள் பற்றி விவரமாக,  எனது தாத்தாவின் கையெழுத்துப் பிரதியுடன்அடுத்த பதிவில் இது பற்றி விவரமாகக் காண்போம். 
                   தானான யிளக்கு முறை உரைக்கக் கேளு
தக்கபடி எடுத்திருத்தி உச்சி மீதில்
கோனான கைவிரித்து வைத்து மறுகைகொண்டு
       குத்திடுவாய் பிட்டி மத்தி தன்னில் தானும்
தேனான நாசிமுகம் தடவித் தூக்கி
தெளித்துவிடு முகமதிலே கும்பம் தன்னை
மானான குணமுடைய ஆசானாகில்
       மனது யுக்தி கொண்டு மிக்க வலு செய்வானே!   
(தொடுவர்மத் திரட்டு! பாடல் 15)


உச்சி வர்மம் கொண்ட நோயாளியை தரையில் எடுத்து இருத்தி (உட்காரும் நிலையில் வைத்துக் கொண்டு) உச்சி மீது வர்ம மருத்துவர் தனது இடது கையை விரித்துக் கவிழ்த்தி வைத்து ,அதன் மீது தனது மறு கைவிரல்களை மடக்கி சுண்டு விரல் பகுதி கீழிருக்குமாறு வைத்து ஒரு குத்து போடவும்,மெதுவாக பிட்டியின் மத்தியில் ஒரு அடியும் போடவும்.நாசி ,முகம் தடவித் தூக்கிவிடவும். அடுத்து கும்பத்தில் (ஒரு செம்பில்) நீர் எடுத்து அதில் நமச்சிவாய‘ என்னும் மந்திரத்தை செபித்து , அந்தத் தண்ணீரை முகத்தில் எறியவும்.இந்தச் செயல்களை செய்யும் போது ஆசானிடத்தில் பக்தியுடன் இருக்க வேண்டும்.

இதன் பின் சுக்கை வைத்தியர் தன் வாயிலிட்டு அதன் வேகமான காற்றை மூக்கின் இரு துளைகளிலும், காதினுள்ளும் ஊத வேண்டும்.இவ்வாறு செய்ய நோயாளி குணமடைவார்.
வர்மத்தை தொடுவர்மம் 96 எனவும் ,படுவர்மம் 12 எனவும் கூறுவர்.ஏற்கெனவே சொன்னது போல் தத்துவங்கள் 96 க்கும் ஒன்றெனவாகும். படுவர்மம் 12ம், உயிரெழுத்துப்பன்னிரண்டையும், அதன் வாயிலாக சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதையும், குறிக்கும்.
பிற அடுத்த பதிவில் சந்திக்கும் போது பார்ப்போம்.படிக்கும் அன்பர்கள் தயவு செய்து கருத்துரை பதியவும்.இது எனக்கு அடுத்த பதிவு எழுத அவசியம் தேவை.
நன்றி
என்றென்றும் நட்புடன்

சாமீ அழகப்பன்.